இலங்கையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில்

by Bella Dalima 04-09-2020 | 6:52 PM
தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்கி எழுதி உலகப் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த தனிப்பெரும் இலக்கியப் பொக்கிஷமாகும். பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்டகாலக் கனவு கடந்த வருடம் மெய்ப்பட ஆரம்பித்தது. இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் தெரிவாகினர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருந்த நிலையில் கொரோனாவினால் அது தடைப்பட்டது. இந்த நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதற்காக படக்குழுவினர் இம்மாதம் 20 ஆம் திகதி வருகை தரவுள்ளதாகவுகம் ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.