கடலூரிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து  

தமிழகத்தின் கடலூரிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 04-09-2020 | 5:31 PM
Colombo (News 1st) தமிழகத்தின் கடலூரிலுள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளரும் அடங்குவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பட்டாசுத் தொழிற்சாலை, காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் அனுமதி பெற்றே இயங்கி வந்துள்ளதாக கடலூர் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் தொழிற்சாலை ஊழியர்களென குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் தயாரித்தார்களா, அனுமதிக்கப்பட்ட வெடிபொருட்களை மாத்திரமே அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடலூர் பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.