பலத்த பாதுகாப்புடன் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான்

by Staff Writer 02-09-2020 | 3:31 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அவர் இன்று கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை (03) அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளிலும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார். இன்று கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார். அவர் வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தங்கவைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.