by Staff Writer 02-09-2020 | 6:27 PM
Colombo (News 1st) மக்கள் பயன்படுத்தும் சர்ச்சைகளற்ற காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் முறையான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தாம் விஜயம் செய்த போது, பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மக்கள் காணி உறுதிப்பத்திரம் இன்மையே தங்களின் பிரதான பிரச்சினை என அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
காணி முகாமைத்துவம், அரச காணி மற்றும் சொத்துக்களுக்கான அபிவிருத்திக்குரிய இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்கள் மற்றும் பயிர்செய்கை மேற்கொள்ளும் இடங்களுக்கு உறுதிப்பத்திரம் இன்மையால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க நாட்டிற்கும் பொருளாதார கொள்கைக்கும் ஏற்ற விதத்தில் காணி கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளில் பயிர்செய்யை மேற்கொள்ளாத இடங்களில் உரிய செய்கையை மேற்கொள்வது முக்கியமானதாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவற்றை இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலகு நிபந்தனைகளின் அடிப்படையில் காணிகளுக்கான தௌிவான உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கான அனுமதியை பெற அரச நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 14 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்குவதை உறுதி செய்வதற்குரிய அரச பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.