by Staff Writer 31-08-2020 | 7:23 PM
Colombo (News 1st) மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்தால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிது காலத்திற்கு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் கிராமிய பொருளாதாரத்திற்கு வலுசேர்த்து விவசாயிகளை கட்டியெழுப்ப எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்குவது இல்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (31) மதியம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியைக் கட்டுப்படுத்தவும் கடன் சுமையில் இருந்து விடுபடவும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் COVID - 19 தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், நகர மக்களை வாழ்க்கைச் சுமையில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் ஒரே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.