பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது - சட்ட மா அதிபர் 

by Staff Writer 31-08-2020 | 5:03 PM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 89 ஈ சரத்தின் படி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாயின் அவரின் வாக்குரிமை நீங்குவதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நீதி அமைச்சில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி என்பதால் தற்போதைய சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கிணங்க அவரால் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்ட மா அதிபரின் இந்த நிலைப்பாடு கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.