இலங்கை தொழிலாளர்கள் 2000 பேருக்கு கொரோனா தொற்று

வௌிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் 2000 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 29-08-2020 | 3:45 PM
Colombo (News 1st) வௌிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 400 பேர் வரையில் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளாகியிருந்த 52 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார். தொழில் அமைச்சினால் நடத்தப்படும் தூதரகங்களூடாக இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 16 நாடுகளிலிருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கொரியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு, விவசாயப் பிரிவில் தொழில் வழங்குவதற்கு கொரிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ள சில தொழிலாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், அவர்கள் விரும்பினால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.