by Bella Dalima 29-08-2020 | 4:44 PM
Colombo (News 1st) மொரிஷியஸ் கடலில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணைய் கசிந்ததைத் தொடர்ந்து இதுவரை 40 டொல்பின்கள் (ஓங்கில்கள்) இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 தொன் எரிபொருளுடன் ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவிற்கு வெளியே பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. இதனால் கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கசியத் தொடங்கியது.
கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரிஷியஸ் இறங்கியது. எனினும், எண்ணெய்க் கசிவு நெருக்கடி மோசமடைந்ததால், மொரிஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்தது.
மொரிஷியஸின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கடற்கரையில் இன்னும் பெரிய கசிவு மற்றும் பேரழிவு தரக்கூடிய சேதம் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மொரிஷியஸ் கடலில் எரிபொருள் கசிவிற்கு காரணமான ஜப்பான் கப்பலின் மாலுமி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மொரிஷியஸ் கடற்கரையில் 17 டொல்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
இதற்கு விளக்கமளித்த மொரிஷியஸின் மீன்வளத்துறை அமைச்சகம், "இறந்த டொல்பின்களின் தாடைகளைச் சுற்றி பல காயங்களும் இரத்தமும் இருந்ததால், எண்ணெய் கசிவு காரணமல்ல” என்று மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுவரை 40 டொல்பின்கள் இறந்துள்ளதாகவும் 200-க்கும் அதிகமான டொல்பின்கள் எண்ணெய்க்கசிவில் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
மொரிஷியஸ் கடலில் இறக்கும் நிலையில் இருந்த தாய் டொல்பின், தனது குட்டியைக் காப்பாற்றப் போராடிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
டொல்பின்கள் இறப்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.