கூத்துக் கலையைக் காத்து வரும் கலைஞர்கள்

by Staff Writer 29-08-2020 | 8:02 PM
Colombo (News 1st) ஈழத்து கலை வடிவங்களில் தொன்மையான கூத்துக் கலையைக் காக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் கலைஞர்கள் பாராட்டுதற்குரியவர்கள். பல சவால்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டு கூத்துக் கலையைக் காத்து வரும் கலைஞர்கள் போற்றுதற்குரியவர்கள். சில பாரம்பரியக் கலை வடிவங்கள் மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளன. மட்டக்களப்பு - வாகரை, பெரிய தட்டுமுனைப் பகுதியில் 17ஆம் போர் கர்ணன் சண்டைக் கூத்தை அரங்கேற்றும் முயற்சி நேற்றிரவு (28) கைகூடியது. வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். தலைமை அண்ணாவியார் கந்தன் இராசரத்தினம், மத்தளக் கலைஞர் வேலன் சிவகுமார் மற்றும் நடிகர்கள் மேடையேற கூத்து ஆரம்பமானது. தோல் இசைக்கருவிகளின் நாதமும், அரிதாரம் பூசிய கலைஞர்களின் நடிப்பாற்றலும், எழுச்சி பொங்கும் வார்த்தைகளும் பார்வையாளர்களின் கரகோஷத்தைத் தூண்டின. இந்தக் கலை வடிவம் இன்னும் பல்லாண்டு உயிர்த்துடிப்போடிருக்க வேண்டும்.