கரும்பு செய்கைக்காக காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி: மக்கள் கடும் எதிர்ப்பு

by Staff Writer 29-08-2020 | 10:22 PM
Colombo (News 1st) கரும்பு செய்கையை முன்னெடுப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு காணி வழங்கும் முயற்சி தொடர்பில் இதற்கு முன்னரான இரண்டு ஆட்சிக்காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டபோதிலும், தற்போது மீண்டும் அவ்வாறான முயற்சி இடம்பெறுகின்றது. பிபில - தெஹிகம பிரதேசத்தில் 65,000 ஏக்கரில் கரும்பு செய்கையை முன்னெடுப்பதற்கு இதற்கு முன்னர் அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், மக்களின் கடும் எதிர்ப்பினால் அதனை முன்னெடுக்க முடியாமற்போனது. காணி சுவீகரிப்பதற்காக தனியார் நிறுவனமொன்றைச் சேர்ந்த சிலர் நேற்றும் இன்றும் அங்கு சென்றிருந்தனர். டோசர் ஒன்றையும் அவர்கள் கொண்டு சென்றிருந்தனர். பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்னவும் அங்கு சென்றிருந்தார்.