by Bella Dalima 29-08-2020 | 4:26 PM
Colombo (News 1st) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொது முடக்கம் தொடங்கிய பிறகு குறித்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவென்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நபருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் நுரையீரலின் சிறு பகுதிதான் இயங்கி வந்துள்ளது.
சுவாசப் பிரச்சினையை எதிர்கொண்ட அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 27 ஆம் திகதி வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.