நௌஷாட் மீது ஒழுக்காற்று விசார​​ணை: குழு நியமனம்

A.M.M.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசார​​ணைக்கு மூவர் அடங்கிய குழு நியமனம்

by Staff Writer 28-08-2020 | 7:19 PM
Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் A.M.M.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான A.M.M.நௌஷாட் அண்மையில் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்காக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார பீடம் நேற்று முன்தினம் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய, அண்மையில் ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகார பீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.