லலித் ஜயசிங்கவை சேவையில் இணைப்பது தொடர்பில் கவனம்

லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைப்பதில் உள்ள தடை என்ன: ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி

by Staff Writer 28-08-2020 | 7:38 PM
Colombo (News 1st) பணி நீக்கம் செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை என அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தெரிவித்தது. இந்த விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்குமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. யாழ். புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்ட போதும் அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லலித் அநுருத்த ஜயசிங்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகிய லலித் அநுருத்த ஜயசிங்க, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பணிப்புரையை விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமது சேவை பெறுநர் ஓய்வு பெறுவதற்கு 11 மாதங்களே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க சார்பில் ஆணைக்குழுவில் ஆஜராகிய சட்டத்தரணி மகேஸ் கொட்டுவெல்ல குறிப்பிட்டார். இந்த கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிப்பதாக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பான சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை வினவிய போது, இது குறித்து ஆராய வேண்டும் என சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நியோமால் ரங்கஜீவவை, பொலிஸ் இன்ஸ்பெக்டராக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள முடியுமாயின், அநுருத்த ஜயசிங்க தொடர்பிலும் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல் என்ன என இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கோரியுள்ளார். இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் கே.கே.கே குணசேகர இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் அஜித் ரோஹனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் அச்சுறுத்தல் காரணமாக அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என லலித் அநுருத்த ஜயசிங்கவிற்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் கே.கே.கே குணசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

ஏனைய செய்திகள்