6 புதிய பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் நியமனம்

பாராளுமன்ற செயற்பாடுகளுக்காக 6 புதிய தெரிவுக்குழுக்கள் நியமனம்

by Bella Dalima 28-08-2020 | 3:47 PM
Colombo (News 1st) பாராளுமன்ற செயற்பாடுகளுக்கான புதிய தெரிவுக்குழுக்கள் 6 நியமிக்கப்பட்டுள்ளன. புதிய தெரிவுக்குழுக்களுக்காக பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். சட்டவாக்க நிலையியற்குழுவானது 17 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும். பிரதி சபாநாயகர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதுடன், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் 15 உறுப்பினர்களைக் கொண்டதாவும் இக்குழு அமைந்திருக்கும். பாராளுமன்றத்தின் நிலையியற்கட்டளைகள் பற்றிய குழுவானது 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நிலையியற்கட்டளைகள் பற்றிய குழுவானது தவிசாளராக சபாநாயகரையும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் மேலும் 14 உறுப்பினர்களுடன் பாராளுமன்ற சபைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது 16 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மனுக்கள் பற்றிய குழுவானது 23 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், இக்குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழு, ஆளும் கட்சியின் பிரதம கொரடா, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு பின்வரிசை உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும்.