by Bella Dalima 28-08-2020 | 3:57 PM
Colombo (News 1st) நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில், பிரதிவாதிகள் இருவரும் தலா 10,000 ரூபா பெறுமதியான பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிணையாளர், பிரதிவாதிகளின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அறிவித்துள்ளார்.
பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதவான், வௌிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெறுவதற்கு முன்னர், குற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை அறிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திம்பிரிகஸ்யாய பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அன்டனி டக்ளஸ் பெர்னாண்டோ எனும் பெயரில் பிரசன்னமாகியிருந்த எஸ்.ஏ.சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர் பொய்யான விடயங்களை கூறியமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.