அரசாங்கத்தின் செலவுகளுக்காக குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

by Bella Dalima 27-08-2020 | 9:01 PM
Colombo (News 1st) அடுத்த சில மாதங்களுக்காக அரசாங்கம் முன்வைத்துள்ள குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பமானது. செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவுகளுக்காக இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறைநிரப்புப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரையான நான்கு மாதங்களுக்கான செலவுகளுக்காக 1900 பில்லியனை ஒதுக்குவதற்கும், 1300 பில்லியன் கடன் வரையறைக்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்கும் இந்த குறைநிரப்புப் பிரேரணையை சமர்ப்பிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் அரச வருமானம் 910 பில்லியனாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் முதல் 8 மாதங்களில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக 521 பில்லியன் செலவாகியுள்ளதாகவும் அதில் வட்டி செலுத்துவதற்காக 675 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 390 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். ஒன்பது பில்லியனுக்கு நெருங்கிய அனைத்து கடன்களையும் மீண்டும் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.