மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுங்கள்: செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 26-08-2020 | 7:36 PM
Colombo (News 1st) மக்களுக்கு விரைவில் பிரதிபலன்களைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். 35 இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
ஐந்து வருட திட்டமொன்றை வகுக்க வேண்டிய பாரிய பொறுப்பு செயலாளர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் அடைய வேண்டிய இலக்குகளை அதில் குறிப்பிட வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்குங்கள். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளமை மக்களிடம் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். அடுத்ததாக அரச சேவை மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. துரித பெறுபேறு அவசியம். மக்களும் துரித பெறுபேற்றையே எதிர்பார்க்கின்றனர்
என கூறினார்.