ஊழியரின் தவறாலேயே மின் விநியோகம் தடைப்பட்டது

ஊழியரின் தவறால் மின் விநியோகம் தடைப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது 

by Staff Writer 26-08-2020 | 7:08 AM
Colombo (News 1st) கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறுதலாலே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கெரவலபிட்டி க்றீட் உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதனாலேயே மின்னுற்பத்தி நிலையங்கள் இரண்டும் ஒரே சந்தர்ப்பத்தில் செயலிழந்ததாகவும் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமைக்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த 17 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால்,  பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 9 பேரை கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.