அங்கொட லொக்காவின் உதவியாளர்  42 கிலோகிராம் ஹெரோயின், வெடிபொருட்களுடன் கைது

by Staff Writer 26-08-2020 | 4:24 PM
Colombo (News 1st) 42 கிலோகிராம் ஹெரோயின், T-56 ரக 03 துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் அம்பத்தலே பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதாளக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்கவும் கொழும்பிற்கு பாரிய அளவில் கேரளக்கஞ்சாவை விநியோகிக்கும் வலையமைப்பின் மூன்று உறுப்பினர்களும் துபாய்க்கு தப்பிச்செல்ல முயறிச்சித்த போது கடந்த 23 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷாப்தீன் மொஹமட் சுபேர் என்ற சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, ஹெரோயின் மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து 42 கிலோகிராம் ஹெரோயின், T-56 ரக 03 துப்பாக்கிகள், 170 ரவைகள் மற்றும் 9mm துப்பாக்கி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.