முஸ்லிம் காங்கிரஸ் -இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - இந்திய உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

by Staff Writer 25-08-2020 | 7:08 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இலங்கைக்கான இத்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹாபிஸ் நசீர் அஹமட், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர். 13 மற்றும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் நசீர் அஹமட் நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார். இந்தத் திருத்தங்கள் மாற்றப்படுவதன் மூலம் சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அவ்வாறான பாதிப்புகள் ஏற்படாதவாறு இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இராஜதந்திர வரையறைக்கு உட்பட்டு தம்மால் எடுக்கக்கூடிய நடவடிக்கையை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கூறினார். பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ''அயல்நாட்டிற்கு முன்னுரிமை'' கொள்கைக்கு அமைய சமாதான மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவிலிருந்து விமானங்கள் வந்து செல்லக்கூடிய வகையில் மட்டக்களப்பு விமான நிலையத்தை விஸ்தரிக்க பங்களிப்புச் செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்திய துணைத் தூதரக அலுவலகமொன்றை நிறுவுமாறு தாம் கோரியதாக, முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் நசீர் அஹமட் நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்