இலங்கையின் ஆதி குடிகள் தமிழ் மக்களா: விக்னேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு உதய கம்மன்பில சவால்

by Bella Dalima 25-08-2020 | 7:28 PM
 Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் உதய கம்மன்பில இன்று சவால் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அமைச்சர் இந்த சவாலை விடுத்துள்ளார். ''எனது தாய் மொழியிலும், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்'' என சி.வி.விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்து, சபாநாயகருக்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கையின் ஆதி குடிகள் தமிழ் மக்களா என்பது குறித்து தன்னுடன் விவாதிக்க வருமாறு உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.
விக்னேஸ்வரனின் கருத்திற்கு வெறுமனே எதிர்ப்புத் தெரிவிப்பதால் மாத்திரம் அது பொய்யாக அமையாது. பொய் என நிரூபிப்பதன் மூலம், அது பொய்யாக அமையும். அவர் கூறுவது, அப்பட்டமான பொய் என நிரூபிக்க நான் தயார். ஆகவே, இலங்கையின் ஆதி குடிகள் தமிழ் மக்களா என்பது குறித்து என்னுடன் விவாதிக்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனுக்கு நான் சவால் விடுக்கின்றேன். நாட்டின் நல்வாய்ப்பாக சி.வி விக்னேஸ்வரனின் கடும்போக்குவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளனர். அவருக்கு யாழ். மக்கள் 21,554 விருப்பு வாக்குகளையே அளித்தனர். பிரிவினைவாதத்திற்குப் பதிலாக, வடக்கு அபிவிருத்தியில் அரசாங்கத்துடன் கைகோர்த்த அங்கஜன் இராமநாதனுக்கு 36,365 விருப்பு வாக்குகளையும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு 32,146 விருப்பு வாக்குகளையும் வடக்கு மக்கள் வழங்கியுள்ளனர். ஆகவே, தமிழ் பிரிவினைவாதத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதற்கு வடக்கு மக்கள் தயாரில்லை என்பது தௌிவாகியுள்ளது
என உதய கம்மன்பில தெரிவித்தார்.