மட்டக்களப்பு சிறுவன் கொலை தொடர்பில் கைதான இருவருக்கும் விளக்கமறியல் 

by Staff Writer 24-08-2020 | 7:04 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை பகுதியில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்டனர். 17 மற்றும் 18 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட சிறுவனின் நண்பர்களாவர். கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை பகுதியில் 15 வயதான ரமணன் திவிராஜ் நேற்று முன்தினம் இரவு கொல்லப்பட்டார். ரமணன் திவிராஜின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் இன்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, பூதவுடலை செங்கலடி சந்திப்பகுதிக்குக் கொண்டுசென்ற பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் கலந்துரையாடியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் பூதவுடல் செங்கலடி பொது மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை, கொலை இடம்பெற்ற வீட்டிற்கு முன்பாகவும் பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.