கொழும்பு சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

by Staff Writer 24-08-2020 | 4:16 PM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் பிரிவு மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கைதிகளை பார்வையிட வருகை தருவோர் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதை தடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் சோதனை நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினரின் சேவை, சிறைச்சாலைகள் தலைமையகத்தினால் பாதுகாப்பு அமைச்சிடம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.