நியமனம் பெறும் கனவுடனேயே இவ்வுலகை விட்டு பிரிந்த பட்டதாரியின் உயிர்...

by Staff Writer 23-08-2020 | 9:29 PM
Colombo (News 1st) பட்டதாரிகளுக்கான நியமனம் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டதன் விளைவாக பலரது எதிர்காலம் கேள்விக்குரியானது. அத்தகைய சம்பவம் மட்டக்களப்பிலும் பதிவாகியுள்ளது. 29 வயதுடைய சச்சிதானந்தம் விக்னேஸ்வரன் அரச நியமனம் கிடைக்கும் வரை காத்திருக்காது, குடும்ப வறுமையை போக்குவதற்காமை மட்டக்களப்பு - முனைக்காடு பகுதியில் கட்டடவேலை உதவியாளராக செயற்பட்டு கொண்டிருந்த போது மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த புதன்கிழமை விபத்துக்குள்னான விக்னேஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிக்கிசைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயின்ற இவர் 2014ஆம் ஆண்டு பட்டம் பெற்றிருந்தார். அரச நியமனம் என்ற கனவு பல வருடங்களாக சாத்தியமடையாத நிலையில் குடும்ப வறுமை காரமாக இவர் கூலித்தொழிலை நாட ​வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். சுமார் 6 வருட காத்திருப்பின் பின்னர் விக்னேஸ்வரனது பெயரும் எதிர்வரும் 2 ஆம் திகதி அரச தொழில் கிடைக்கவுள்ள பட்டதாரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எத்தனையோ எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் உயர்கல்வியை பூர்த்தி செய்தும் உரிய தொழில் கிடைக்காமையே இத்தகைய துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.