நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

by Staff Writer 23-08-2020 | 2:24 PM
Colombo (News 1st) நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து கடந்த 20 ஆம் திகதி நாடு திரும்பிய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த பெண் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த பெண், இருதய நோய் மற்றும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 47 வயதான பெண்ணுக்கு ஏற்பட்ட இருதயக்கோளாறே மரணத்திற்கான காரணம் எனவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார். உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் முதலாம் திகதி நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,947 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 6 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளளனர். ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, குவைத் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 6 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 2,798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.