வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 22-08-2020 | 8:26 PM
Colombo (News 1st) மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர், வட மேல் மாகாணத்தில் இரு போகங்களிலும் 12,500 ஏக்கர் செய்கையை முன்னெடுக்க முடியும் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல், மொரகொல்லாகம, சியஒலன்கமுவ குள அணைக்கட்டுப் பகுதியில் பிரதமர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். செயற்றிட்ட அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதேவேளை, வடமேல் மாகாண கால்வாய்த் திட்டத்தின் கீழ், 350 சிறு குளங்களும், 08 பாரிய குளங்களும் வளம்பெறவுள்ளன. இதன் கீழ் அமைக்கப்படும் ஹக்வடுனா நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 2500 ஏக்கர் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம், சிறுநீரக நோய்க்கு தீர்வு வழங்குதல், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், யானை - மனித மோதலைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிட்டவுள்ளன.