மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

துருக்கியில் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

by Bella Dalima 22-08-2020 | 4:42 PM
Colombo (News 1st) துருக்கி கடற்பரப்பில் 320 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி தன் நாட்டைச் சுற்றியுள்ள கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயுவைக் கண்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் துருக்கி மேற்கொண்டு வரும் இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்கும் செயற்பாடுகளுக்கு அக்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமாக இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடிக்கும் வேலையில் துருக்கி இறங்கியுள்ளதாக கிரீஸ் குற்றம் சுமத்தி வருகிறது. கிரீஸின் இந்த குற்றச்சாட்டுகளையும் மீறி துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துருக்கியின் கடற்பகுதியில் உள்ள கருங்கடலில் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தாயூப் எர்டோகன் நேற்று தெரிவித்தார். 320 பில்லியன் கனமீட்டர் (11.3 டிரில்லியன் கன அடி) அளவில் இயற்கை எரிவாயு இருப்பதை துருக்கி கப்பல் கண்டுபிடித்துள்ளது. துருக்கி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயு 2023 ஆம் ஆண்டு முதல் மக்களில் நுகர்வுக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். ரூமேனியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கருங்கடலின் மேற்கு பகுதியில் துருக்கியின் ஃபடா கப்பல் கடலில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்த போது தான் இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.