உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கான இழப்பீடு அதிகரிப்பு

தொழில் நிமித்தமான கடமையின் போது உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கான இழப்பீட்டை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 21-08-2020 | 4:03 PM
 Colombo (News 1st) பணியில் இருக்கும் போது அல்லது தொழில் நிமித்தமான கடமையின் போது திடீரென உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது அல்லது தொழில் நிமித்தமான கடமையின் போது திடீரென உயிரிழக்கும் தொழிலாளிகளுக்காக தற்போது 5 இலட்சம் ரூபா வரை மாத்திரமே நட்டஈடு வழங்கப்படுகின்றது. இதனிடையே, தொழிலாளர்களின் இழப்பீட்டுத்தொகை தொடர்பான வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்காக புதிய வேலைத்திட்டமொன்று முன்மொழியப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா கூறியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து வழக்குகளும் தொழில் நியாய சபைகளுக்கு அனுப்பப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.