தெலுங்கானா நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவல்

தெலுங்கானா நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 6 பேரின் சடலங்கள் மீட்பு

by Bella Dalima 21-08-2020 | 5:03 PM
Colombo (News 1st) தெலுங்கானாவில் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 பேர் நீர் மின் நிலையத்தினுள் சிக்கியிருந்த நிலையில், அவர்களில் 6 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. தெலுங்கானா - ஆந்திரப்பிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீர் மின் நிலையத்தினுள் சிக்கியிருந்த 10 பேரை உடனடியாக மீட்டுள்ளனர். மேலும், 9 பேர் உள்ளே சிக்கியிருந்ததுடன், அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடம் படையினர் ஈடுபட்டு வந்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் வௌியேறி தப்பியுள்ளதுடன், நீர் மின் உற்பத்தி நிலையத்தின் கீழ் பகுதியில் பணியாற்றியவர்கள் புகை காரணமாக வௌியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் செயற்பட்டு வந்த குறித்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.