Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு இன்று நியமிக்கப்பட்டது.
சபாநாயகர் தலைமையில் கூடும் இந்தக் குழுவில் கட்சித் தலைவர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில்
- நிமல் சிறிபால டி சில்வா
- தினேஷ் குணவர்தன
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
- டக்ளஸ் தேவானந்தா
- டலஸ் அழகப்பெரும
- விமல் வீரவன்ச
- பிரசன்ன ரணதுங்க
- லக்ஷ்மன் கிரியெல்ல
- கயந்த கருணாதிலக்க
- ரவூப் ஹக்கீம்
- விஜித்த ஹேரத்
- செல்வம் அடைக்கலநாதன்
ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தெரிவுக் குழுவின் ஊடாக பாராளுமன்றத்தின் ஏனைய செயற்குழுக்கள் நியமிக்கப்படுவதுடன், பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களின் போதும் இந்த செயற்குழு கூடவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இந்தத் தெரிவுக்குழு முதற்தடவையாகக் கூடியது.
இதன்போது, பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான குழு எனப்படும் கோப் குழுவினதும், அரச வங்கி செயற்குழுவினதும் தலைவர் பொறுப்புகள் எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு அறிவித்தார்.
கடந்த காலத்தில் தாம் ஆளும் கட்சியில் இருந்த போது குறித்த இரண்டு குழுக்களினதும் தலைவர் பதவிகளை, எதிர்க்கட்சிக்கு வழங்கியதை கிரியெல்ல நினைவுகூர்ந்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவில்லை என்பதுடன், எதிர்காலத்தில் இதற்கு பதிலளிப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது.