சாகல, நிலந்த ஜயவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல்: சாகல ரத்நாயக்க, நிலந்த ஜயவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 21-08-2020 | 8:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க அழைக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் வரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று மீண்டும் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தில் வௌிநாடு சென்றிருந்ததால் அவருக்கு அறிவிக்க முடியவில்லை என நிலந்த ஜயவர்தன சாட்சியமளித்துள்ளார். இந்த அபாய எச்சரிக்கை குறித்து அப்போதைய பிரதமருக்கோ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிற்கோ அறிவிக்க முடியவில்லை என்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பாக அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பெரியளவில் தலையீடு செய்யவில்லை எனவும், அவருடன் இணைந்து பணிகளை தொடரும் வழக்கம் அப்போது இருக்கவில்லை என்றும் நிலந்த ஜயவர்தன விளக்கமளித்தார்.