சுதத் அஸ்மடலவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 

இராஜகிரிய விபத்து: சுதத் அஸ்மடலவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 

by Staff Writer 20-08-2020 | 2:08 PM
Colombo (News 1st) வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல மற்றும் திலும் துஷித குமார ஆகியோரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளிலும் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கவனயீனமாக வாகனத்தை செலுத்தி இளைஞர் ஒருவரை காயப்படுத்தியமை, விபத்தை தடுப்பதற்கு முயற்சிக்காமை உள்ளிட்ட விடயங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்கை இல்லாது செய்ய போலி சாட்சியங்களை தயார் செய்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாட்டிற்கு செல்லக்கூடாது என பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது. இராஜகிரிய பகுதியில் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.