மயிலிட்டியில் தனியார் காணியில் வெடிபொருட்கள்

மயிலிட்டி வடக்கில் தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 19-08-2020 | 5:46 PM
Colombo (News 1st) யாழ். மயிலிட்டி வடக்கில் தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கில் உள்ள தனியார் காணியொன்றை சுத்தம் செய்த பொழுது வெடிபொருட்கள் தென்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர் பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பெக்​கோ இயந்திரத்தின் உதவியுடன் வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது மூவாயிரத்திற்கும் அதிகமான T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வெடிபொருட்களை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் கொட்டடியில் நேற்று முன்தினம் (17) மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டிருந்தன. கட்டுமானப் பணிகளுக்காக தனியார் காணி ஒன்றைத் தோண்டிய சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. யாழ். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உத்ராபதி மயூரதன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மண்டை ஓடு உள்ளிட்ட சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.