சிறைச்சாலையிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

by Staff Writer 18-08-2020 | 3:33 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சிறைச்சாலைக்குள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் இன்று மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி என தெரிவித்து மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்றபோது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொட பதில் நீதவான் மங்கள வர்ணகுலசூரிய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த படல்கம பகுதியைச் சேர்ந்த துமிந்த முனசிங்க என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரான லஹிரு பிரதீப் எனும் நபர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.