நிதி மோசடி: முன்னாள் அரச அதிகாரிகள் நால்வர் கைது 

நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அரச அதிகாரிகள் நால்வர் கைது 

by Staff Writer 18-08-2020 | 10:58 AM
Colombo (News 1st) நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் முகாமையாளர், முன்னாள் வலய முகாமையாளர் மற்றும் 2 கணக்காய்வாளர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கடனுதவி மற்றும் வீட்டுக் கடன்கள், சந்தேக நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விடயம் தொடர்பில், கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (18) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.