தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்

by Staff Writer 18-08-2020 | 7:24 AM
Colombo (News 1st) இறம்பொடை- வெவன்டனில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு சொந்தமான இல்லத்தில் இன்று (18) அதிகாலை தீ பரவியது. மூன்று தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வீட்டில் இன்று அதிகாலை பரவிய தீ கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளது. சுமார் மூன்றரை மணித்தியாலங்களின் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ பரவிய சந்தர்ப்பத்தில் நேபாள பிரஜையான காவலாளியும் வீட்டிற்கு பொறுப்பாக இருந்தவரும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு தீயினால் காயங்கள் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், வீட்டில் இருந்த பழமையான தளபாடங்கள் அனைத்தும் தீயினால் சேதமடைந்துள்ளன. தீயினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரின் உதவியுடன் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாக கொத்மலை பொலிஸார் கூறினர்.

ஏனைய செய்திகள்