ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ருவன் விஜேவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 18-08-2020 | 8:21 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முற்பகல் சாட்சியமளித்தார். காலை 9.30 அளவில் பொலிஸ் பிரிவிற்கு வருகை தந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார்.
 உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்திருந்தனர். எதிர்வரும் நாட்களில் நான் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். நாட்டு மக்கள் இதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாகும். எந்தவொரு விசாரணைக்கும், ஆணைக் குழுவிற்கும் சென்று பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை
என ருவன் விஜேவர்தன வாக்குமூலமளித்த பின்னர் கூறினார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவை நாளை காலை 9.30-க்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது