நல்லை கந்தன் ஆலய இரதோற்சவம் இனிதே நிறைவு

by Staff Writer 17-08-2020 | 3:20 PM
Colombo (News 1st) வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கந்தப் பெருமானின் இரதோற்சவம் வெகு விமர்சையாக இன்று (17) நடைபெற்றது. அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக் கிரமமாக சண்முகப் பெருமானுக்கு நடைபெற்றன. ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க சண்முகப் பெருமான் தேவியர் சமேதராய் திருத் தேருக்கு எழுந்தருளினார். சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் சர்வ அலங்காரங்களுடன் சண்முகனாரும் கஜவல்லி, மகாவள்ளியும் எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் புரிகின்ற காட்சி கண்டு பக்தர்கள் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்தனர்.