வெள்ளவத்தையில் பிரதமர் தலைமையில் அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்

by Staff Writer 15-08-2020 | 7:21 PM
Colombo (News 1st) அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமரபுர மகா சங்கத்தின் அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. சங்க பீடத்தின் ஞாபகார்த்தப் பிரிவு திறந்து வைக்கப்பட்டபோது பிரதமருடன், பங்களிப்பு சபையின் உபதலைவர் அஜித டி சொய்சாவும் பிரசன்னமாகியிருந்தார். அதனையடுத்து, பீடத்திற்கு அரும்பணியாற்றிய மகாநாயக்க தேரர்களின் திரு உருவப் படங்கள் திரை நீக்கம் செய்யப்பட்டன. சேர் சிறில் சொய்சா ஞாபகார்த்த இடம் என பெயரிடப்பட்டுள்ள அமரபுர மகா சங்க பீடத்தின் அலுவலக நிர்மாணப் பணிகளுக்காக உபதலைவர் அஜித டி சொய்சா நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார். சேர் சிறில் டி சொய்சாவை நினைவுகூர்ந்து அவரது நிழற்படத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து சம்பிரதாயப்பூர்வ நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படை அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.