பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்க முடியும் என்கிறார் நீதியமைச்சர்

by Staff Writer 15-08-2020 | 7:04 PM
Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அரசியலமைப்பின் நான்காவது சரத்திற்கமைய, ஜனாதிபதி அனைத்து பாதுகாப்புப் பிரிவுகளினதும் கட்டளையிடும் அதிகாரியாக வேண்டும் என்பதுடன், நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என அலி சப்ரி குறிப்பிட்டார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை குறைபாடுகளுடன் கொண்டுவந்தனர். ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது என 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது நான்காவது சரத்துடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. திருத்தங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட அனைத்து மாற்றங்களையும் விட நான்காவது சரத்தே முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகவே, பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகிக்கும் மக்கள் ஆணை கிடைக்கிறது
என அவர் மேலும் கூறினார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் நீதியமைச்சர் கருத்துத் தெரிவித்தார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் மீளாய்வு செய்து வருவதாகவும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விடயங்கள் குறித்து இப்போது மக்களுக்கு எதனையும் கூற முடியாது எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
நாம் ஐந்து வருடங்களுக்கு மேல் இருப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. இரண்டு தடவைகளே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதை மாற்றுவதற்கும் நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு விடயங்கள் தவிர்ந்த ஏனையவை குறித்து நாம் மீளாய்வு செய்து வருகின்றோம்
என அவர் குறிப்பிட்டார்.