வர்த்தமானியில் 2 கட்சிகளின் தேசியப்பட்டியல் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு

by Staff Writer 15-08-2020 | 3:36 PM
Colombo (News 1st) இரண்டு கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதற்கிணங்க, ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், இரான் விக்ரமரத்ன, ஹரீன் பெர்னாண்டோ, மயந்த திசாநாயக்க, டயனா கமகே உள்ளிட்டோர் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஹரினி அமரசூரிய தெரிவாகியுள்ளார். மேலும் மூன்று கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்டது. குறித்த வர்த்தமானியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு இதுவரை எவ்வித பரிந்துரையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை.