பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர மனு தாக்கல்

by Staff Writer 13-08-2020 | 9:29 AM
Colombo (News 1st) நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, மரண தண்டனை குற்றவாளியான பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாவாகியுள்ள பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றம் கடந்த மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்காக கஹவத்தை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றுக்கு இடையூறு விளைவித்து, ஒருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். பிரேமலால் ஜயசேகர 2010 காலப்பகுதியில் மின்சக்தி, எரிசக்தி மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவர் கடந்த பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்ததுடன், இம்முறை பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.