எங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்: தேசியப் பட்டியல் நியமனத்தில் இழுபறி

by Staff Writer 13-08-2020 | 9:12 PM
Colombo (News 1st) எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்து கட்சியின் சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதேவேளை, கட்சியின் முற்போக்கு செயற்பாட்டாளரான அரம்பேபொல ரத்னசார தேரர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமறைவாக இருக்கும் கட்சியின் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கூறினார். அதுரலியே ரத்தன தேரர், கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், கட்சியின் செயலாளரான தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதால், தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பது தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. தம்முடன் இணைந்து கட்சியின் செயற்பாடுகளை மேற்கொண்ட அரம்பேபொல ரத்னசார தேரர் இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு சிலரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கூறினார். இந்நிலையில், தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்து எமது மக்கள் சக்தி கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரந்திக அத்துகோரள என்பவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.