தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தாமதம்

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தொடர்ந்தும் தாமதம்

by Staff Writer 13-08-2020 | 7:32 AM
Colombo (News 1st) தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என எங்கள் மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. உறுப்பினரை பெயரிடுவது தொடர்பில், சட்ட ஆலோசனை பெறுவதாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான எங்கள் மக்கள் சக்திக்கு இம்முறை ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. ஆனால் கட்சியின் செயலாளரான தேரர் தற்போது தலைமறைவாகியுள்ளமையால் அந்த ஆசனத்திற்கான உறுப்பினரை பெயரிடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதேவேளை, பாராளுமன்றம் கூடும் தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படமாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் நியமிக்கப்பட்டதன் பின்னர், சபாநாயகரினால் ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது பாராளுமன்றம் கூடவுள்ளது.