6381 கிலோகிராம் மஞ்சளுடன் சிலாபத்தில் நால்வர் கைது

படகில் சோதனை: 6,381 கிலோகிராம் மஞ்சளுடன் சிலாபத்தில் நால்வர் கைது

by Staff Writer 12-08-2020 | 5:07 PM
Colombo (News 1st) சிலாபம் கடலில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, 6,381 கிலோகிராம் மஞ்சளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சளுடன் சந்தேகநபர்கள் நால்வரும் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டனர். COVID-19 தொற்று காரணமாக கைப்பற்றப்பட்ட மஞ்சளை தொற்றுநீக்கிய பின்னர் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும், இந்திய வர்த்தகர்களுடன் தொடர்புகளைப் பேணியிருப்பார்கள் என சந்தேகிப்பதால், அவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக சிலாபம் நகரில் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர், கரையோர காவல்படையினர், பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 09 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேன் ஒன்றும், 22,42,500 ரூபா பணமும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறினர். 27 தொடக்கம் 66 வயதிற்கு இடைப்பட்டவர்களே சிலாபம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.