பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளை பொறுப்பேற்றார்

by Staff Writer 11-08-2020 | 10:40 AM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இன்று (11) தமது கடமைகளை பொறுப்பேற்றார். மத வழிபாடுகளின் பின்னர் பிரதமர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஸ கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. குருநாகலில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 527,364 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார். அரசியல் வாழ்வில் 5 தசாப்தங்களை நிறைவு செய்துள்ள அவர், தனது தந்தையின் வழியில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 4 தடவைகள் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மற்றும் 2 தடவைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி செயற்பட்ட ஒரேயொரு மக்கள் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.