19 தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்களடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

by Staff Writer 11-08-2020 | 7:19 AM
Colombo (News 1st) 19 பேர் அடங்கிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (10) வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானியில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்காத நிலையில், 3 கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளன. வாக்களிப்பின் மூலம் பெறப்படும் 196 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை இணைக்கும் வகையில் 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்படுவதற்கு இலங்கை தேர்தல்கள் சட்டம் வழிவகை செய்துள்ளது. இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மொஹமட் முஸம்மில் மர்ஜான் பளீல் கலாநிதி சுரேன் ராகவன் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சாகர காரியவசம் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மஞ்சுளா திஸாநாயக்க பேராசிரியர் ரஞ்சித் பண்டார பேராசிரியர் சரித ஹேரத் கெவிந்து குமாரதுங்க பேராசிரியர் திஸ்ஸ விதாரண பொறியியலாளர் யாதமுனி குணவர்தன டிரான் அலஸ் கலாநிதி சீதா அரம்பேபொல ஜயந்த கெட்டகொட ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவராசா கலையரசன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இதுவரை தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்கவில்லை. குறித்த கட்சிகளும் தமது உறுப்பினர்களை பெயரிடும் பட்சத்தில், விரைவில் அவற்றை வர்த்தமானி அறிவித்தலூடாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.