எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலைப் பறிக்க பிரான்ஸில் இருந்து சதி: ஞானசார தேரர் தெரிவிப்பு

by Staff Writer 11-08-2020 | 8:41 PM
Colombo (News 1st) அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான 'எங்கள் மக்கள் சக்தி' கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் இது தொடர்பில் அறிவிக்காமல் தலைமறைவாகியுள்ளமையைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை உருப்பெற்றது. தேரரை பதவியிலிருந்து நீக்குவதாக குறித்த கட்சியினர் நேற்று தெரிவித்திருந்தனர். தலைமறைவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேதினிகம விமலதிஸ்ஸ தேரர், குறித்த நிலைமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதை என்னால் தௌிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. தலைவர் மற்றும் வேறு குழுவினர் ஒரு அணியாகத் திரண்டு இதனை தங்களுக்கு கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். யார் என்ன கூறினாலும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் எவ்வித குழப்பமும் ஏற்படாது என நான் நம்புகின்றேன். எனது கடிதம் அல்லவா முதலில் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு எனின், செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பிலான கடிதத்தை முதலில் அனுப்பியிருக்க வேண்டும். ஒப்படைக்கும் நேரத்தில் தேர்தல் அலுவலகத்தை சூழ 100 அல்லது 200 பேர் இருந்தனர். 50 வாகனங்கள் என்னைப் பின்தொடர்ந்தன.பொலிஸார் இராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து நகரங்களிலும் கடமையாற்றுகின்றார்கள். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பகுதிக்கு சென்றிருந்தால் அந்த வீட்டினைச் சுற்றிவளைக்கின்றனர். அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது. எனக்காக அல்ல. என்னை சிறையில் அடைப்பதற்காக. ஞானசார தேரரை நியமிப்பதற்காக அல்ல அந்த உறுப்பினர் பதவியை வழங்குவதாகத் தெரிவித்து அவரை ஏமாற்றி திருட்டுத் தனத்தில் ஈடுபட முயற்சிக்கின்றனர். உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அதனை ஞானசார தேரருக்கு வழங்கும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். நாங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். நாங்கள் சந்தித்து கலந்துரையாடுவோம் என்று அனைவரும் தெரிவிக்கின்றார்கள். நேற்று நான் அதற்கமைய சந்தித்து கலந்துரையாடுவதற்கு சென்ற போது என்னை சுற்றிவளைத்துக் கொண்டனர். என்னுடன் கலந்துரையாடுவதற்கு அல்ல, அவர்கள் என்னைக் கைது செய்வதற்காகவே முற்பட்டனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் தப்பி வந்தேன்
என வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கூறினார். இதேவேளை, எங்கள் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
நான் செயலாளரான தேரருடன் 5 நிமிடங்களேனும் நேருக்கு நேர் கலந்துரையாடவில்லை. சதகம் செவனவில் கண்டேன். அனைத்தும் சரியாகிவிட்டது. அரசியல் கட்சி தொடர்பில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார் அல்லவா? எதிர்வரும் 12 ஆம் திகதி நானோ அல்லது ரத்ன தேரரோ தேசியப் பட்டியலில் அல்லாமல் செயலாளர் பதவியேற்கவுள்ளதாக எங்களுக்கு அறியக்கிடைத்துள்ளது. இது பிரான்ஸிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது பாரிய வேலைத்திட்டமாகும். அனைத்தையும் ஒருவர் ஒரே பிடியில் வைத்துள்ளார். அவரின் மூன்று நிபந்தனைகள் காணப்படுகின்றன. அஸ்கிரி மகா சங்கத்தினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்வது, அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது இவையே அந்த நிபந்தனைகள். ரத்ன தேரர் அவர் யார் என்பது தொடர்பில் அறியாமல் அல்லவா போயுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகியதன் பின்னர் என்ன செய்யவுள்ளார்? இது தீர்க்கப்படாவிட்டால் அவருக்கும் இல்லை எனக்கும் இல்லை. இது தற்கொலைத் தாக்குதலைப் போன்றதொரு விளையாட்டல்லவா?
இதேவேளை, எங்கள் மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரம்பேபொல ரத்னசார தேரர் நேற்று இரவு பாதுக்கை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். விமலதிஸ்ஸ தேரரை மறைத்து வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டவரை அழைத்துச் செல்வதற்காக தேரர் வருகை தந்திருந்ததாகவே தேரர் வந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்குமாறு வலியுறுத்தி இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று வலுப்பெற்றது. ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த போது குறித்த இடத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தார்.

ஏனைய செய்திகள்