கொள்கைகளை அடிப்படையாக வைத்தே அமைச்சுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

by Bella Dalima 08-08-2020 | 7:56 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டையில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஸ, இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் புதிய அமைச்சரவை அமையும் விதம் தொடர்பில் விளக்கமளித்தார். அமைச்சுப் பதவிகளைத் தான் பெறுவதற்கு முன்னர், தனது தந்தைக்காக முன்நின்றவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக எம்முடன் 53 பேர் இருந்தனர். அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் பணத்திற்கு அடிபணியாமல், வீதியில் இறங்கி, மஹிந்தவுடன் 53 பேர் இருந்தனர். அவர்களுக்கு நியாயம் கிடைத்தன் பின்னர் தலைவர்களுடன் என்னால் பேச முடியும். மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல. கொள்கைகளை அடிப்படையாக வைத்தே அமைச்சுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக, நல்லாட்சி அரசாங்கம் பகிர்ந்தளித்தது போன்று அல்ல. சரியான முறைப்படி அமைச்சுகளும் விடயங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
என நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார். செழிப்பான எதிர்காலத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமானவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ, அனைத்து கட்சித் தலைவர்கள் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.