கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்: சிறிதரன் தெரிவிப்பு

by Bella Dalima 08-08-2020 | 7:26 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தற்போது இலங்கை தமிரசுக் கட்சி உறுப்பினர்களின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வியடைந்தமை தொடர்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஒரு சில வாக்குகளால் அன்றி, தீர்மானமாக அவர்கள் தோற்றுள்ளதால், அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தழிரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் மத்திய குழு மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து தலைமைத்துவத்தை வழங்கினால், அதனை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
நானாக ஒரு தனி மனிதனாக கட்சியின் தலைமையைப் பறித்து அல்லது எடுத்து கட்சி நடத்துதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும். எல்லோருடைய ஒன்றுபட்ட முயற்சியும் வேண்டும். எல்லோரும் இணைந்தால், அப்படி ஒரு பொறுப்பு தரப்பட்டால் அதனை செவ்வனே செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்
என சிவஞானம் சிறிதரன் கூறினார்.